அரியலூர், நவ. 11: அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, தலைமையில் நேற்று நடைபெற்றது.இக்கூட்டத்தில், முதியோர் உதவித் தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன், பசுமை வீடு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 334 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து மாவட்ட கலெக்டர் மூலம் பெறப்பட்டு, இம்மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
முன்னதாக அரியலூர் மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் தன்விருப்ப நிதியிலிருந்து 1 பயனாளிக்கு ரூ.26,000 மதிப்பிலான தையல் இயந்திரத்தினை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அதனைத்தொடர்ந்து, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 4 நபர்களுக்கு அலுவலக உதவியாளர் நிலையில் கருணை அடிப்படையில் பணி நியமனம் ஆணைகளை மாவட்ட கலெக்டர் ரத்தினசாமி, வழங்கினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.சிவராமன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், மாவட்ட நிலை அலுவலர்கள் மற்றும் அனைத்துதுறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
