பெரம்பலூர், செப்.2: தமிழ்நாடு டாஸ்மாக் கடை பணியாளர்கள் அனைத்து சங்கத்தின் கூட்டுக்குழு-அரியலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடை பணியாளர்கள், காலி மது பாட்டில்களை திரும்ப பெறுவதற்கு போதிய பணியாளர்களும், இட வசதியும் இல்லாததால் மாற்று ஏற்பாடு மூலம் காலி மது பாட்டில்களை திரும்ப பெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி மதுபான பாட்டில்கள் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கரை மாவட்ட மேலாளரிடம் ஒப்படைக்க வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
செப்டம்பர் 1ம்தேதி முதல் அரியலூர் மாவட்டத்தில் காலி மதுபான பாட்டில்கள் திரும்பப் பெறும் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டதால், தமிழ்நாடு டாஸ்மாக் கடை பணியாளர்கள் அனைத்து சங்கத்தின் கூட்டுக்குழு சார்பில் தமிழக டாஸ்மாக் பணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் குணசேகரன் தலைமையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கொளஞ்சியப்பன் மற்றும் சூபர்வைசர்கள், சேல்ஸ் மேன்கள் என மொத்தம் 50 பேர் நேற்று பெரம்பலூர் வடக்குமாதவி சாலையில் இயங்கிவரும் தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபான மொத்த விற்பனை கிடங்கு மாவட்ட மேலாளர் அலுவலகத்திலுள்ளபெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட மேலாளர் முத்து கிருஷ்ணன் என்பவரிடம், மதுபான பாட்டில்கள் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கரை திரும்ப கொடுக்க வந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.அப்போது மாவட்ட மேலாளர் முத்துக் கிருஷ்ணன் உயர் அதிகாரிகளுடன் கலந்துபேசி தீர்வு கூறுவதாக கூறியதால், டாஸ்மாக் பணியாளர்கள் மதுபான பாட்டில்கள் மீது ஒட்டப்படும் ஸ்டிக்கரை அரியலூர், ஜெயங்கொண்டம் சப்.டிவிஷன் அலுவலகத்தில் வைத்து விட்டுதான் கடைக்கு செல்வோம், மதுபான பாட்டில்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி காலி மதுபான பாட்டில்களை திரும்ப பெற மாட்டோம் என்று கூறிவிட்டு கலைந்து சென்றனர்.