குன்னூர், டிச. 11: குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் போதை பொருட்கள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த நீலகிரி காவல்துறையினர் தொடர்ந்து போராடி வந்தாலும், சமவெளி பகுதிகளில் இருந்துவரும் வாகனங்கள் மூலம் பான், குட்கா போன்ற போதை பொருட்கள் நீலகிரிக்கு கொண்டு வரப்பட்டு, விற்பனை செய்து வருவது அதிகரித்து வருவதால் போலீசார் திணறி வருகின்றனர். இந்த நிலையில், குன்னூர் கிருஷ்ணாபுரம் அருகேயுள்ள ஒரு பெட்டிக்கடையில் பான், குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்வதாக குன்னூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் கடந்த வாரம் போலீசார் அப்பகுதியில் செயல்பட்டு வந்த கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டதில் போதை பொருட்கள் விற்பனை செய்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து அந்த கடைக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்ததோடு, 30 நாட்களுக்கு கடையை திறப்பதற்கு தடை விதித்து, சீல் வைத்தனர்.
இந்த கடையில் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதேப்போல் போதை பொருள் விற்பனை செய்து வந்த நிலையில் அதிகாரிகள் சோதனை நடத்தியதில் போதை பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு அந்த கடைக்கு ரூ.25 ஆயிரம் அபராதம், 15 நாட்கள் வரை கடையை திறப்பதற்கு தடை விதித்து சீல் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அபராத தொகை குறைவாக விதிக்கப்படுவதால் தொடர்ந்து இதுபோன்ற நபர்கள் இச்செயலில் ஈடுபட்டு வரும் சம்பவங்களும் அதிகரித்து வருகிறது. எனவே அபராத தொகையை அதிகப்படுத்தி போதை பொருட்கள் விற்பனை செய்யும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


