குன்னூர், செப்.26: குன்னூர் அருகே ஓடையில் தத்தளித்த மரநாயை வனத்துறையினர் மீட்டு வனப்பகுதியில் விடுவித்தனர். குன்னூர் சுற்றுப்பகுதிகளில் யானை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் மட்டுமின்றி அரிய வகை சிறிய உயிரினங்களும் குடியிருப்பு பகுதியில் சுற்றித் திரிகின்றன. இந்த நிலையில் புரூக்லேண்ட்ஸ் பகுதியில் ஓடையில் மரநாய் ஒன்று விழுந்து தத்தளித்து கொண்டிருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
வனச்சரகர் ரவீந்திரநாத் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஓடை நீரில் உயிருக்கு போராடி கொண்டிருந்த மரநாயை மீட்டனர். பின்னர் வனத்துறை வாகனத்தில் எடுத்துக்கொண்டு சிம்ஸ்பூங்கா வனப்பகுதியில் விடுவித்தனர்.