பாலக்காடு, நவ. 19: பாலக்காடு மாவட்டம், வண்டித்தாவளம் அருகே நெடும்பள்ளத்தைச் சேர்ந்தவர் குஞ்சு மகன் சசி (49). இவர், மரப்பேட்டை தொழிலாளியாக வேலைபார்த்து வந்தார். கடந்த சனிக்கிழமை வழக்கம்போல் மரப்பேட்டையில் லாரிகளில் மரம் ஏற்றும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மரத்துண்டு ஒன்று அவரது காலில் விழுந்துள்ளது. இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இதனைத்தொடர்ந்து சக ஊழியர்கள் அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்தவர், சிகிச்சை பலனில்லாமல் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மீனாட்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


