ஊட்டி, ஆக. 14: நீலகிரி மாவட்டத்தில் லோடிங் மற்றும் அன்லோடிங் ஜெனரல் ஒர்க்கர்ஸ் யூனியன் (சிஐடியு) நீலகிரி மாவட்ட பேரவை கூட்டம் ஊட்டியில் உள்ள சிபிஎம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. சங்க தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார். நிர்வாகி ஹசன் வரவேற்றார். சுமை சங்க நிர்வாகி மணிகண்டன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சிஐடியு மாவட்ட பொருளாளர் நவீன் சந்திரன் பேசினார். இதைத்தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இதன்படி தலைவராக ரமேஷ், செயலாளராக ராஜன், பொருளாளராக மணிகண்டன் உள்பட 13 பேர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில் வனவிலங்குகள் நடமாடும் குன்னூர் டாஸ்மாக் குடோனை மாவட்ட மையப் பகுதியான ஊட்டி நகரத்துக்கு மாற்ற வேண்டும். அதன் தொழிலாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும்.
மாவட்டத்திலுள்ள சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு கலெக்டர் அறிவித்த குறைந்தபட்ச ஊதியத்தை வழங்க வேண்டும். நலவாரிய அலுவலகங்கள் தாலுகா அளவில் அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சிஐடியு மாவட்ட செயலாளர் வினோத் நன்றி கூறினார்.