ஊட்டி, ஆக. 12: தாவரவியல் பூங்காவில் ரோஜா மலர்களை போன்று காட்சியளிக்கும் லிசியான்தஸ் மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது.ஊட்டியில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவில் இரண்டாம் சீசனுக்கான நடவு பணிகள் தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. பூங்காவில் உள்ள அனைத்து பாத்திகளிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு தற்போது அவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும் 15 ஆயிரம் தொட்டிகளில் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அவைகளும் பராமரிக்கும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
மலர்களே இல்லாத நிலையில், பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையில் மட்டும் பல்வேறு மலர் தொட்டிகளை கொண்டு பூங்கா நிர்வாகம் மலர அலங்காரங்களை செய்துள்ளது. இதனையே தற்போது சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். கண்ணாடி மாளிகையில் பல்வேறு வகையான மலர் செடிகள் வைக்கப்பட்டுள்ளன. இதில், லிசியான்தஸ் மலர்களும் ஒன்று. ரோஜா மலர்களை போன்று மிகவும் அழகாகவும், அதே வடிவிலும் இந்த மலர்கள் காட்சியளிக்கின்றன.
வெள்ளை மற்றும் நீல நிறங்களில் காணப்படும் இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது. எனவே, பூங்காவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்ணாடி மாளிகை சென்று அங்குள்ள இந்த மலர் அலங்காரத்திற்கு முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கின்றனர்.