திருச்செங்கோடு, அக்.30: மத்திய பிரதேச மாநிலம் கரியாடோலா மாவட்டத்தை சேர்ந்தவர் கிரகலாட் குமார்(37). இவர் திருச்செங்கோடு தாலுகா, எலச்சிபாளையம் அடுத்த கிளாப்பாளையத்தை சேர்ந்தவரின், ரிக் வண்டியில் வேலை பார்த்து வந்தார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு, இவரது தம்பி, மத்திய பிரதேசத்தில் இறந்து விட்டார். இதற்காக சென்றவர் கடந்த 27ம் தேதி மீண்டும் திருச்செங்கோடு வந்தார். கிரகலாட் குமாருடன் பிறந்தவர்கள் 5 பேர் ஆவர். ஆனால் நான்கு பேர் இறந்து விட்டனர். இதனால் மனவிரக்தியில் இருந்தார். நேற்று அதிகாலை 6 மணியளவில் கிரகலாட் குமாரை அழைத்து வர, ரிக் வண்டியில் உடன் பணியாற்றுபவர்கள் சென்ற போது, அங்கு அவர் தூக்கிட்ட நிலையில் இறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து எலச்சிபாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், அவரது சடலம், மத்திய பிரதேச மாநிலம் கரியாடோலா மாவட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து எலச்சிபாளையம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement
