சேந்தமங்கலம், நவ.27: திருமண முகூர்த்த நாள் எதிரொலியாக எருமப்பட்டி வட்டாரத்தில் குண்டுமல்லி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1200 விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான நவலடிப்பட்டி, அலங்காநத்தம், பொட்டிரெட்டிபட்டி, காவக்காரன்பட்டி, முத்துகாபட்டி, பழையபாளையம், கோம்பை, போடிநாயக்கன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் அதிக அளவில் குண்டுமல்லி சாகுபடி செய்துள்ளனர்.
கொல்லிமலை அடிவாரத்தில் விளையும் பூக்கள், நன்கு திரட்சியாகவும், மணம் மிகுந்திருப்பதால் வெளி மாவட்ட வியாபாரிகள் அதிக அளவில் வந்து வாங்கி செல்கின்றனர். மேலும், இப்பகுதி விவசாயிகள் கூலி ஆட்களை வைத்து பூக்களை பறித்து நாமக்கல், ராசிபுரம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சந்தைகளுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். பூக்களின் வரத்து அதிகரிக்கும் போது விலை குறையும். இதுபோன்ற சமயங்களில் விவசாயிகள் பூக்களை பறித்து திருப்பூர், காங்கேயம், திண்டுக்கல் மற்றும் கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூ மார்க்கெட், நறுமணத் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வைக்கின்றனர். எருமப்பட்டி பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்துள்ளது. இதனால் ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1000க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இன்று முகூர்த்த தினத்தையொட்டி திருமணங்கள், வீடு கிரக பிரவேசம், கோயில் கும்பாபிஷேகம் உள்ளிட்டவை நடைபெறுவதால், பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்து நேற்று ஒரு கிலோ குண்டுமல்லி ரூ.1200க்கு விற்பனை செய்யப்பட்டது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.


