திருச்செங்கோடு, நவ. 26: திருச்செங்கோடு அடுத்த ஆன்றாபட்டியைச் சேர்ந்தவர் நடராஜன் (55). இவர் சலூன் கடையில் வேலை பார்த்து வந்தார். நேற்று இவர் வீட்டில் இருந்து உறவினர் வீட்டிற்கு செல்லும் போது, அந்த வழியாக வந்த டூவீலர், இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நடராஜன் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே, விபத்தை ஏற்படுத்தி டூவீலரை ஓட்டிவந்த அதே பகுதியை சேர்ந்த டிரைவர் செல்வராஜ்(46) என்பவரும் காயமடைந்து, திருச்செங்கோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து, திருச்செங்கோடு புறநகர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement


