திருச்செங்கோடு, நவ.25: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயிலில் அர்த்தநாரீஸ்வரர், செங்கோட்டு வேலவர் மற்றும் ஆதிகேசவ பெருமாள் ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. இந்த சாமிகள் திருமலையில் இருந்து நகருக்கு இறங்கி வந்து தேரின் மீது அமர்ந்து வரும் தேர்த்திருவிழா, திருச்செங்கோட்டில் வைகாசி விசாகப் பெருவிழாவாக கோலாகாலமாக கொண்டாடப்படும். அர்த்தநாரீஸ்வரர் தேர் சுமார் 450 வருடங்களுக்கு முன்பு, மைசூர் மகாராஜாவால் செய்து தரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பக்தர்களின் கோரிக்கையை ஏற்று ரூ.2.17 கோடியில் அர்த்தநாரீஸ்வரருக்கு புதிய தேர் செய்ய அரசு அனுமதி அளித்தது. தேருக்கான நிதி பக்தர்களிடம் நன்கொடையாக பெறப்பட்டது.
புதிய தேர் செய்யும் பணி, கடந்த 12.7.2024 அன்று தொடங்கப்பட்டது. புதிய தேர் 100 டன் எடையில் அமைகிறது. தேர் செய்ய தேக்கு, இலுப்பை, வேங்கை ஆகிய மரங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. புதிய தேரை திருவாரூர் ஸ்தபதி இளவரசன் 20 பேர் கொண்ட தனது குழுவினருடன் நிர்மாணித்து வருகிறார். புதிய தேர் செய்யும் பணிகள் ஏறத்தாழ 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. தெய்வங்கள் அமரும் தேவாசனம், சிம்மாசனம் செய்யும் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன. புதிய தேர் வெள்ளோட்டம் விடப்பட்டவுடன், பக்தர்கள் காணும் வகையில், பழைய தேர் காட்சிப் பொருளாக வைக்கப்படும். கலைநயம் மிக்க துணிகள் தயாராகி வருகிறது. இந்நிலையில், புதிய தேர் கட்டுமானப் பணிகளை, ஈஸ்வரன் எம்எல்ஏ நேற்று ஆய்வு செய்தார். அப்போது, நகர்மன்ற தலைவர் நளினி சுரேஷ்பாபு, அறங்காவலர் குழு தலைவர் தங்கமுத்து, அறங்காவலர்கள் பிரபாகரன், சித்ரா வண்ணக்கண்ணன், அர்த்தநாரி, பச்சியப்பன், கோவில் உதவி ஆணையர் ரமணிகாந்தன் மற்றும் கொமதேக நிர்வாகிகள் உடனிருந்தனர்.



