நாமக்கல், செப்.24: நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் பகுதி நேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில், பகுதிநேர நகை மதிப்பீட்டாளர் பயிற்சி வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சி வரும் 15.10.2025ம் தேதி தொடங்கப்படவுள்ளது. பயிற்சிக்கான விண்ணப்பத்தினை பயிற்சி நிலையத்தில் ரூ.118 கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம். பயிற்சி காலம் 2 மாதம்(100 மணி நேரம்). இப்பயிற்சிக்கான கல்வித் தகுதி 1ம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 17 வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
அதிகபட்ச வயது வரம்பு இல்லை. பயிற்சி கட்டணமாக ரூ.4,550 செலுத்த வேண்டும். இக்கட்டணத்தில் தரம் அறியும் உபகரணங்கள் வழங்கப்படும். 40 மணி நேரம் வகுப்பறை பயிற்சியும், 60 மணி நேரமும் செயல்முறை பயிற்சியும் அளிக்கப்படும். பயிற்சி முடித்ததும் சான்றிதழ் வழங்கப்படும். கூட்டுறவு சங்கங்கள், கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளிலும் நகை மதிப்பீட்டாளராக பணியில் சேர வாய்ப்பு உள்ளது. மேலும், விபரங்களுக்கு நாமக்கல் கூட்டுறவு மேலாண்மை நிலையம், 796-சேலம் பிரதான சாலை, முருகன் கோயில் அருகில், நாமக்கல் 637001 என்ற முகவரியில் நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.