பள்ளிபாளையம், அக்.16: பள்ளிபாளையத்தில் கஞ்சா பொட்டலங்கள், போதை மாத்திரைகளை வைத்திருந்த 2 வாலிபர்களை கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில்
அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் முனியப்பா நகர் முத்து மாரியம்மன் கோயில் பகுதியில் சில வாலிபர்கள் அடிக்கடி சுற்றி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து எஸ்ஐ., இளஞ்சூரியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்ேபாது அங்கு சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த 2 வாலிபர்களை போலீசார் பிடித்து சோதனையிட்டனர். இதில் ஒருவரிடம் 400 கிராம் கஞ்சா பொட்டலங்களும், இன்னொவனிடம் 70 போதை மாத்திரைகளும் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் டிவிஎஸ் மேட்டை சேர்ந்த லட்சுமணன்(21), முனியப்பன் கோயில் வீதியை சேர்ந்த தினேஷ்குமார்(25) என்பதும் தெரிய வந்தது. இவர்கள் இருவரும் அப்பகுதிக்கு வரும் இளைஞர்களிடம் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்துவந்தது தெரிய வந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், குமாரபாளையம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். இருவரையும் 15 நாட்கள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இருவரையும் போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.