சேந்தமங்கலம், செப்.13: புதுச்சத்திரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்டத ரிக் வண்டி டிரைவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். புதுச்சத்திரம் அருகே நவணி ஊராட்சி வெள்ளாளப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் வீரக்குமார்(49). ரிக் டிரைவரான இவரது மனைவி சாந்தி. இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுச்சத்திரம் அடுத்த பால்பண்ணை அருகே வீரக்குமார் நடந்து சென்று கொண்டிருந்தபோது பின்பக்கமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில், படுகாயமடைந்த வீரக்குமாரை, அக்கம் பக்கத்தினர் மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதுகுறித்து புதுச்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement