சேந்தமங்கலம், நவ.12: கொல்லிமலை ஒன்றியத்தில், மறைந்த திமுக நிர்வாகிகள் 39 பேரின் குடும்பத்தினருக்கு, கலைஞர் குடும்பநல நிதியை ராஜேஸ்குமார் எம்பி வழங்கினார். கொல்லிமலை ஒன்றியத்தில் உள்ள 14 ஊராட்சிகளில், மறைந்த திமுக நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு, கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞர் குடும்ப நல நிதி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஒன்றிய செயலாளர் செந்தில்முருகன் தலைமை வகித்தார். ஊராட்சி பொறுப்பாளர்கள் பாலசுந்தரம், பழனிசாமி, வெங்கடாஜலம் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட திமுக செயலாளர் ராஜேஸ்குமார் எம்பி கலந்துகொண்டு, மறைந்த திமுக நிர்வாகிகள் 39 பேரின் குடும்பத்தினருக்கு கலைஞர் குடும்ப நல நிதியை வழங்கினார்.
அப்போது அவர் பேசுகையில், ‘கிழக்கு மாவட்ட திமுக சார்பில், திமுக நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு திருமணத்திற்கு தங்க நாணயம், கல்லூரியில் படிக்க செல்லும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி ஊக்கத்தொகை, மறைந்த நிர்வாகிகள் குடும்பத்தினருக்கு கலைஞர் குடும்ப நலநிதி, உடல் நலம் பாதிக்கப்பட்டால் மருத்துவ நலநிதி உள்ளிட்ட பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் அறுவை சிகிச்சை தேவைப்படுவோர், மாவட்ட திமுக அலுவலகத்தை தொடர்பு கொண்டால், பிரதமர் காப்பீடு திட்டத்தின் மூலம், இலவசமாக அறுவை சிகிச்சை செய்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார். இந்த நிகழ்ச்சியில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் காளியப்பன், வழக்கறிஞர் ஆனந்தபாபு, சித்தார்த், கிருபா, கனகராஜ் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
