நாமக்கல், அக்.7: நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் துர்கா மூர்த்தி தலைமை வகித்தார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, வங்கி கடனுதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டியும், பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 398 மனுக்களை பொதுமக்கள் வழங்கினர். இந்த மனுக்களை பரிசீலினை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி, அவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டர் உத்தரவிட்டார். குமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த கட்டிட தொழிலாளி கோவிந்தராஜ் என்பவர் பணியின்போது உயிரிழந்ததால், அவரது வாரிசுதாரருக்கு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் ரூ.5 லட்சம் உதவித்தொகையை கலெக்டர் வழங்கினார். இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வடிவேல் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
+
Advertisement