ராசிபுரம், நவ.1: ராசிபுரம் வட்டாரத்தில் புதுப்பிக்கப்பட்ட பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ், ரபி பருவத்திற்கு சின்ன வெங்காயம், மரவள்ளி பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என, ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் கார்த்திகா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: பயிர் காப்பீடு செய்வதன் மூலம் வடகிழக்கு பருவ மழைகளுக்கு சேதம் ஏற்படும் பட்சத்தில், நிவாரணம் பெற இயலும். ஆகையால் விவசாயிகள் தங்களுக்கு அருகாமையில் உள்ள தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம், தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். ஒரு ஹெக்டேர் சின்ன வெங்காய பயிருக்கு ரூ.5,218 மற்றும் மரவள்ளிக்கு ரூ.1,310 என பிரீமியம் தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சின்ன வெங்காய பயிருக்கு 2026 ஐனவரி 31ம் தேதியும், மரவள்ளிக்கு பிப்ரவரி 28ம் தேதியும் பிரீமியம் செலுத்த கடைசி நாளாகும். மேலும் தகவல்களுக்கு, ராசிபுரம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்கநர் அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
+
Advertisement
