Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

நீர், நிலம் மாசுபடும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படாது

நாமக்கல், ஜூலை 28: நாமக்கல் மாவட்டத்தில் நீர், நிலம் மற்றும் காற்று மாசுபடும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படாது என்றும், இது தொடர்பாக மக்களிடம் வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார். நாமக்கல்-மோகனூர் ரோட்டில் உள்ள லத்துவாடியில், அரசு கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில், தோல் தொழிற்சாலை மற்றும் சிறைச்சாலை அமைக்க நிலம் அளவீடு பணி செய்யப்பட்டுள்ளதாக ஒரு சில விவசாய அமைப்பினர் கூறி வருகின்றனர். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

இந்நிலையில், சுற்றுசூழல், சுகாதாரம் நிலத்தடி நீரை பாதிக்கும் தோல்தொழிற்சாலையை விவசாயம் சார்ந்த பகுதியில் அமைக்கும் முடிவை கைவிடக்கோரி, கால்நடை மருத்துவ கல்லூரி முன் இன்று (28ம்தேதி) ஆர்ப்பாட்டம் செய்யபோவதாக லத்துவாடி கிராம விவசாயிகள் என்ற பெயரில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் நீர், நிலம் மற்றும் காற்று மாசுபடும் வகையில் தொழிற்சாலைகள் அமைக்கப்படாது. இது போன்ற வதந்திகளை யாரும் பரப்பவேண்டாம் எனவும், அத்தகைய செயலில் ஈடுபடும் நபர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு வகையான தொழில் வளர்ச்சிகளை, தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. இம்மாவட்டத்தில் வசித்துவரும் பொதுமக்களின் வேலைவாய்ப்பு, பாதுகாப்பு மற்றும் சுகாதாரங்களை கருத்தில் கொண்டு பல்வேறு வகையான தொழில் வளர்ச்சியை மாவட்டம் பெற்று வருகிறது. அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் நீர், நிலம் மற்றும் காற்று மாசுபடும் வகையிலும், பொது மக்களுக்கு பாதுகாப்பாற்ற வகையிலும் தொழிற்சாலை அமைய இருப்பதாக தவறான செய்திகளை யாரும் பொது மக்களிடையே பரப்ப வேண்டாம். வதந்திகளை பரப்புவோர் மீது சட்டத்திற்கு உட்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழில்துறை சார்பில் மாவட்டத்தில் அமைக்கப்படும் தொழிற் பூங்காக்களுக்கு பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு பொதுமக்களின் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்படும். அதன் பின் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார்.