மயிலாடுதுறை, நவ.15: மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் காந்த் தொடங்கி வைத்தார். பாதுகாப்பான குழந்தைப் பருவத்திற்காக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து விதமான குழந்தை நேய செயல்பாடுகளிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும், குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளான குழந்தைத் திருமணம், இளம்வயது கர்ப்பம், பாலியல் வன்முறை, பள்ளி இடைநின்றல், போதைப்பொருள் பயன்பாடு, குழந்தை தொழிலாளர் சமூக ஊடகங்கள் தாக்கம், பாலின வேறுபாடு மற்றும் வேறு எந்தவிதமான குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வந்தாலும் உடனடியாக அக்குழந்தைகளை பாதுகாக்கும் செயலில் ஈடுபட வேண்டும். சாதி மத இன வேறுபாடு இன்றி அனைத்து குழந்தைகளையும் சமத்துவமாக நடத்த வேண்டும்.
குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகள் என் கவனத்திற்கு வரும் பட்சத்தில் உடனடியாக 1098, 181 மற்றும் அருகே உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். நம் எதிர்காலத்தில் முதலீடு செய்வது என்பது, நம் குழந்தைகளுக்காக முதலீடு செய்வதாகும் என்பதை உணர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசுடன் ஒருங்கிணைந்து செயலாற்ற வேண்டும். குழந்தைநேய சமூகத்தை இணைந்து உருவாக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகளை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்வு மாவட்ட கலெக்டர் காந்த் தலைமையில், உறுதிமொழியை அரசு அலுவலர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டனர். இதில் சுகாதார துறை இணை இயக்குநர் பானுமதி, உதவி திட்ட அலுவலர் சங்கர், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் முத்துகனியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
