நாகப்பட்டினம், ஆக.18: மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்களை நம்ப வேண்டாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து கலெக்டர் வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண்கள் அடிப்படையில், மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கைக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நடைபெறும் கலந்தாய்வில் மட்டுமே இடஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது.
அரசின் மருத்துவ படிப்பிற்கான சேர்க்கை கலந்தாய்வில் பங்கேற்பது, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று அங்குள்ள சேர்க்கை மையத்தை தொடர்பு கொண்டு மருத்துவ படிப்பிற்கான இடத்திற்கான ஆலோசனை பெறுவது ஆகியவற்றை மாணவர்கள் மேற்கொள்ள வேண்டும். எனவே மருத்துவ படிப்பிற்கு இடம் வாங்கி தருவதாக கூறும் இடைத்தரகர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.