தரங்கம்பாடி, நவ.7: மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் டிபிஎம்எல் கல்லூரியில் நேற்று நடந்த மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழர்களின் மரபையும் தமிழ் பெருமிதததையும் உணர்த்தும் வகையில் மாபெரும் தமிழ் கனவு என்ற பெயரில் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி கடந்த 2023ம் ஆண்டு அண்ணா நினைவு நாளன்று துவக்கப்பட்டது. தமிழ்நாடு முழுவதும் 2 லட்சம் மாணவ, மாணவிகளை சென்றடையும் வகையில் 200 இடங்களில் பரப்புரை நடத்த திட்டமிட்டு 100வது நாள் நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்றார்.
முதல்வர் உரையாற்றுகையில் இந்நிகழ்வானது கல்லூரி மாணவர்களிடையே தமிழ் மரபு, தமிழர் தொன்மை, மொழி முதன்மை, சமூக விழிப்புணர்வு, சமத்துவ வளர்ச்சி குறித்த புரிதலை ஏற்படுத்தும் வகையிலும், அடுத்தக்கட்ட இலக்குகளை நோக்கிச் செல்லும் வகையிலும் அமைந்து இருக்கிறது என்றும், எனவே கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் அனைவரும் பயனடையும் வண்ணம் இந்நிகழ்ச்சி அடுத்து வரும் ஆண்டுகளிலும் தொடர்ந்து நடத்தப்படும் எனவும் அறிவித்தார்.
தற்போது அடுத்த கட்ட பரப்புரை துவங்கபட்ட நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், பொறையார் டிபிஎம்எல் கல்லூரியில் நேற்று மாபெரும் தமிழ் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கவிஞர் நெல்லை ஜெயந்தா கலந்து கொண்டு ‘‘வாசிப்பதில் இருக்கிறது வாழ்க்கை” என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மயிலாடுதுறை மாவட்ட ஆட்சி தலைவரின் நேர்முக உதவியாளர் அன்பழகன், பொறையார் டிபிஎம் கல்லூரி முதல்வர் பேராசிரியர் ஜான்சன் ஜெயக்குமார் கலந்து கொண்டனர். உயர் கல்விதுறையும், தமிழ் இணைய கல்வி கழகமும் இணைந்து இந்த நிகழ்ச்சியை நடத்தியது. மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சியில் டிபிஎம் கல்லூரி உள்பட பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
