கீழ்வேளூர், ஆக.3: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த கொடியாலத்தூரில் காளியம்மன், அய்யனார் கோயில் 30ம் ஆண்டு ஆடி திருவிழா நடைபெற்றது. ஆடி திருவிழாவை முன்னிட்டு கோயிலில் உள்ள சின்னம்மாள் காளியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களான பால விநாயகர், வரதராஜ பெருமாள் மற்றும் அய்யனார் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரித்து மகா தீபாராதனை மற்றும் கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக சக்தி கரகம் மற்றும் கப்பரை எடுத்தல் நிகழ்வுடன் பக்தர்கள் பால்குடங்களை சுமந்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் சாற்றப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இரவு அம்பாள் மயில் வாகனத்தில் வீதி உலா காட்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.