Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

செம்பனார்கோயில் அருகே சம்பா நெற்பயிருக்கு மருந்து தெளிப்பு பணி

செம்பனார்கோயில், நவ.28: செம்பனார்கோயில் அருகே சம்பா நெற்பயிர்களுக்கு மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோயில், ஆறுபாதி, பரசலூர், மேமாத்தூர், கூடலூர்,காளகஸ்திநாதபுரம், மடப்புரம், ஆக்கூர், முடிகண்டநல்லூர், மேலப்பாதி, திருச்சம்பள்ளி, கருவாழக்கரை, கஞ்சாநகரம், கீழையூர், தலைச்சங்காடு, கிடாரங்கொண்டான், கருவிழந்தநாதபுரம், சங்கிருப்பு, தலச்சங்காடு உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள், ஆயிரக்கணக்கான ஏக்கரில் நடவு, நேரடி நெல்விதைப்பு, திருந்திய நெல் சாகுபடி முறையில் சம்பா சாகுபடி செய்துள்ள விவசாயிகள் வயலில் பராமரிப்பு பணி மேற்கொண்டு வருகின்றனர். தற்போது நெற்பயிர்கள் முளைத்து வருகிறது. இந்நிலையில் கனமழை மற்றும் நோய் தாக்குதலால் நெற்பயிர் வளர்ச்சி இன்றி காணப்பட்டது. இதனால் நெற்பயிருக்கு மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து மேமாத்தூர் கிராம விவசாயி கூறுகையில், நடப்பு சம்பா பருவத்தை முன்னிட்டு இந்த பகுதியில் கடந்த 40 நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டது. முன்னதாக பம்புசெட் மூலம் வயலில் தண்ணீர் பாய்ச்சி, நிலத்தை நன்கு உழுது, வயல் விதைப்புக்கு பக்குவப்படுத்தினோம். பின்னர் பிபிடி கோ- 46, கோ- 50 போன்ற நெல் ரகங்களை வயலில் விதை விட்டு பாய் நாற்றங்கால் தயாரித்து, நாற்றுகள் தயாரானதும் நடவு செய்து தொடர்ந்து பராமரிப்பு பணியில் ஈடுபட்டோம். இதன் பயனாக இளம் நெற்பயிர்கள் முளைத்து வந்தது.

இந்நிலையில் மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக நோய் தாக்குதல் ஏற்பட்டு நெற்பயிருக்கு மருந்து தெளிக்கப்பட்டது. அதன் பின்னர் சம்பா நெற்பயிர்கள் வளர்ந்து வந்தது. தொடர்ந்து பெய்த கனமழையால் வயலில் மழைநீர் தேங்கி இளம் நெற்பயிர்கள் மூழ்கியது. அதன் பின்னர் மழைநீர் வடிந்தும் 40 நாட்கள் ஆன பயிர் வளர்ச்சி இல்லாமல் இருந்தது. இதனால் நெற்பயிர் வளர்ச்சிக்கு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது. இதில் நெற்பயிர் வளர்ச்சி பெற்றால் தான் மகசூல் இருக்கும். ஆனால் இன்னும் சில நாட்களுக்கு கனமழை இருப்பதாக வானிலை மையம் தெரிவித்திருப்பதால் மேலும் பாதிக்கும் நிலை உள்ளது. இதனால் மிகுந்த வேதனையில் உள்ளோம். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையால் நெற்பயிர் சேதமாவது வாடிக்கையாகி வருகிறது. இதிலிருந்து நாங்கள் மீள அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறினார்.