மயிலாடுதுறை, அக்.23: மயிலாடுதுறையில் இருந்து சர்வதேச நாடுகளுக்கான தபால் சேவை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் உமாபதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: இந்திய அஞ்சல் துறை உள்நாடு மற்றும் சர்வதேச தபால் சேவைகளை சிறப்பாக செய்து வருகிறது. அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளுக்கான சர்வ தேச தபால் சேவைகள் (ஸ்பீடு போஸ்ட், பார்சல் உள்ளிட்டவை) மீண்டும் மயிலாடுதுறை தபால் கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் நிலையங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த சர்வதேச தபால் சேவைகள் கடந்த சில மாதங்களாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன. தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், மேற்கண்ட சேவைகள் மீண்டும் தபால் அலுவலகங்களில் தொடங்கப்பட்டுள்ளன. இதை தொடர்ந்து, பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இந்த சர்வதேச தபால் சேவைகளை தொடர்ந்து பயன்படுத்தி கொள்ளலாம். இதனை பயன்படுத்தி அனுப்பப்படும் தபால் பொருட்கள், முகவரி மற்றும் தொடர்பு விவரங்களுடன் அனுப்பப்பட வேண்டும்.
அனுப்பப்படும் பொருட்கள் அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளின் இறக்குமதி விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்க வேண்டும். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு அருகிலுள்ள தபால் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் அல்லது www.indiapost.gov.in < http://www.indiapost.gov.in/ > என்ற இணையதளத்தை பார்வையிடலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.