மதுரை, அக். 30: மதுரையில் திடீரென குறுக்கே பாய்ந்த மாட்டின் மீது டூவீலர் மோதிய விபத்தில், அதனை ஓட்டிச்சென்ற இளைஞர் பரிதாபமாக பலியானார். மதுரை, நரிமேடு சிங்கராயர் காலனி விரிவாக்கம் முதல் தெருவை சேர்ந்தவர் சங்கையா. இவரது மகன் மணிகண்டன்(35). இவர் நேற்று புதுநத்தம் ரோடு வழியாக ஐயர்பங்களாவிற்கு டூவீலரில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்து பனங்காடி போலீஸ் சோதனை சாவடி அருகே, திடீரென சாலையின் குறுக்கே ஒரு மாடு பாய்ந்தது.
இதனை எதிர்பாராத மணிகண்டன் நிலைதடுமாறிய நிலையில், அவரது வாகனம் மாட்டின் மீது பலமாக மோதியது. இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த அவரை, அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர், அந்த இளைஞர் இறந்து விட்டதாக தெரிவித்தார். இந்த விபத்து குறித்து தந்தை சங்கையா அளித்த புகாரின் பேரில், மாநகர போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
