மதுரை, ஆக. 20: மதுரை பழங்காநத்தம் விகேபி நகரை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வி(47). இவர் பாண்டி கோயில் ரோட்டில் உள்ள மருத்துவமனையில் நர்ஸாக வேலைபார்த்து வருகிறார். பகல் வேலை முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக மாட்டுத்தாவணி நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த வாலிபர் அவர் அணிந்திருந்த தாலி சங்கிலியை பறித்து ஓட்டம் பிடித்தார்.
இதில் தமிழ் செல்வி கூச்சல் போட்டபடி அவரை விரட்டி செல்லவே, பொதுமக்களும் சேர்ந்து அவரை விரட்டி பிடித்தனர். பின்னர் அந்த வாலிபரை மாட்டுத்தாவணி போலீசில் ஒப்படைத்தனர் . போலீசார் நடத்திய விசாரணையில் அவர், ஊமச்சிகுளம் திருமால்புரத்தை சேர்ந்த விஜய்(28) என்பது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்து தாலிச்செயினை பறிமுதல் செய்தனர்.