மதுரை, அக். 17: மதுரை செனாய் நகரில் உள்ள இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் தனியார் நிறுவனத்தின் சமூக பொறுப்பு நிதியின் கீழ் ஒரு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் புதிய டிஜிட்டல் ஸ்மார்ட் டிவி வழங்கப்பட்டது. பள்ளியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மருத்துவ நுழைவு தேர்விற்கான பயிற்சி வகுப்பு மற்றும் தினசரி பாடப்பயிற்சிக்காக இந்த டிவி வழங்கப்பட்டுள்ளது.
இதனை மாநகராட்சி துணை கமிஷனர் ஜெய்னுலாப்தீன் பார்வையிட்டார். இதே தனியார் நிறுவனம் 10 பள்ளிகளில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியை நிறுவி, தொடர் பராமரிப்பும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் கல்விக்குழுத் தலைவர் ரவிச்சந்திரன், கல்வி அலுவலர் ஜெய்சங்கர், தனியார் நிறுவன உரிமையாளர்கள் சுதாகர், அறிவழகன், பள்ளி தலைமை ஆசிரியர் உமாமகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.