திருப்பரங்குன்றம், செப். 15: திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில், ஆண்டுதோறும் நவராத்திரி விழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான விழா செப்..23ம் தேதி துவங்கி அக்.2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதையொட்டி தினமும் சிறப்பு அலங்காரத்தில் கோவர்த்தனாம்பிகை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். முதல் நாள் ராஜராஜேஸ்வரி அலங்காரம் நடைபெறும். தொடர்ந்து நவ.26ல் பாட்டாபிஷேகம், 27ல் திருக்கல்யாணம் நடைபெறும்.
நவராத்திரி விழாவினை தொடர்ந்து பசுமலையில் உள்ள மண்டபத்திற்கு சுப்பிரமணியசுவாமி எழுந்தருளி, அம்பு விடும் நிகழ்ச்சி நடைபெறும். இதனையொட்டி அக்.2ம் தேதி மாலை கோயிலில் இருந்து தங்கக்குதிரை வாகனத்தில் வெள்ளியிலான வில் அம்பு ஏந்நியபடி சுப்பிரமணியசுவாமி புறப்பட்டு பசுமலை சென்றடைந்து அம்பு விடும் நிகழ்வில் பங்கேற்பார். விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியா பாலாஜி தலைமையில் அறங்காவலர்கள் சண்முகசுந்தரம், கோயில் துணை ஆணையர் சூரிய நாராயணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.