Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

திருக்கார்த்திகை எதிரொலி: மதுரை பூ மார்க்கெட்டில் மல்லிகை கிலோ ரூ.2 ஆயிரம்

மதுரை, டிச. 13: இன்று திருக்கார்த்திகை பண்டிகையை முன்னிட்டு, மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டில் நேற்று ஒரு கிலோ மல்லிகைப்பூ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது. மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு மதுரை மாவட்டத்துடன், வெளி மாவட்ட பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இங்கிருந்து தென் மாவட்ட பகுதிகளுக்கும் வியாபாரிகள் பூக்களை விலைக்கு வாங்கிச் செல்கின்றனர். தொடர் மழையால் ஏற்கனவே பூக்கள் வரத்து சரிந்து, விலை அதிகரித்திருந்தது. இந்நிலையில் இன்று (டிச.13) திருக்கார்த்திகை பண்டிகை என்பதால், தேவை அதிகரிப்பால் பூக்கள் விலை மேலும் அதிகரித்தது. மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் கிலோ ரூ.ஆயிரத்திற்குள் விற்று வந்த மதுரை மல்லிகை, நேற்று காலை கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.

இதே போல் மற்ற பூக்களின் விலையும் ஒரு மடங்கு அதிகரித்தே விற்பனை செய்யப்பட்டது. இதன்படி மெட்ராஸ் மல்லிகை கிலோ ரூ.1,200, பிச்சி ரூ.800, முல்லை ரூ.1,000, செவ்வந்தி ரூ.180, சம்பங்கி ரூ.180, செண்டு மல்லி ரூ.100, கனகாம்பரம் ரூ.1,500, ரோஸ் ரூ.250, பட்டன் ரோஸ் ரூ.300, பன்னீர் ரோஸ் ரூ.350, கோழிக்கொண்டை ரூ.120, அரளி ரூ.550, தாமரை ஒரு பூ ரூ.25 என விற்பனை செய்யப்பட்டது. மதுரை மாட்டுத்தாவணி பூ வியாபாரிகள் சங்க நிர்வாகி முருகன் கூறும்போது, ‘‘ஆன்மிக நகரான மதுரையில் பொதுவாக திருக்கார்த்திகை தினத்தில் பூக்கள் விற்பனை அதிகரித்து, விலையும் அதிகரிக்கும். இம்முறை மழை உள்ளிட்ட காரணத்தாலும், தொடர்ந்து முகூர்த்தம் மற்றும் கோயில் விழாக்கள் என முக்கிய நாட்களாலும் தேவை அதிகரித்துள்ளது. இதற்கிடையே வரத்து குறைவால் பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

ஓரிரு நாட்களில் மார்கழி மாதம் துவங்க உள்ளது. இதனால் அனைத்து கோயில்களிலும் தினந்தோறும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதனால் பூக்கள் விலை மேலும் உயர வாய்ப்பிருக்கிறது’’ என்றார்.