திருமங்கலம், செப். 13: மதுரை, தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் மேற்கு வங்கம், பீகார், ராஜஸ்தான், ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களை சேர்ந்த ஏராளமா தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதன்படி மேற்குவங்க மாநிலம் கங்காரா பகுதியை சேர்ந்த மண்டுமகாதோ(35) என்பவர், சமீபத்தில் கட்டிட வேலைக்கு வந்தார். பின்னர் மாற்றுப்பணியாக அவரது சித்தி விஜயமகாதோவுடன் சமையல் உதவியாளராக இருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பணியில் இருந்த மண்டுமகாதோவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மதுரை, பைக்காராவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர். அங்கிருந்து திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.இதுகுறித்து ஆஸ்டின்பட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.