மதுரை, நவ. 12: இறுதி ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததை தட்டிக்கேட்ட வாலிபர் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை சிந்தாமணி அழகர்நகரை சேர்ந்த வாலிபர் உமாமகேஸ்வரன்(19). இவர் அப்பகுதியில் உள்ள தெருவில் நவ.9ம் தேதி அன்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சிந்தாமணி மேட்டு புஞ்சையை சேர்ந்த சொக்கலிங்கம் மனைவி பாண்டியம்மாள் இறந்தவரின் உடலுடன் இறுதி ஊர்வலம் நடந்து கொண்டிருந்தது.
அப்போது பலரும் பட்டாசு வெடித்தும், மாலைகளில் இருந்த பூக்களை பிய்த்து எறிந்தும் கொட்டு மேளத்துடன் உடலை மயானத்திற்கு எடுத்துச் சென்று கொண்டிருந்தனர். அப்போது வெடித்த பட்டாசு உமாமகேஸ்வரன் மீது பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து கேட்டபோது, அவரை, ஊர்வலத்தில் சென்ற சிந்தாமணியை சேர்ந்த அழகுராஜா(23), கருப்புசாமி (எ) ராஜா(33), பாண்டீஸ்வரன்(25) மற்றும் சரவணன்(23) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து கீரைத்துறை போலீசில் உமாமகேஸ்வரன் நவ.10ம் தேதி அளித்த புகாரின் பேரில் 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
