ஆடிப்பெருக்கை முன்னிட்டு பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கம்: அரசு போக்குவரத்துக்கழகம் தகவல்
மதுரை, ஜூலை 31: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட அதிகாரிகள் கூறியதாவது: வரும் 1ம் தேதி, 2ம் தேதி மற்றும் 3ம் தேதி ஆகிய நாட்களில் ஆடிப்பெருக்கு மற்றும் வார விடுமுறை காரணமாக வெளியூர் செல்லும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எனவே மதுரையில் இருந்து சென்னை, கோவை, சேலம், திருப்பூர், ராமேஸ்வரம், தென்காசி, குற்றாலம், நெல்லை, கன்னியாகுமரி மற்றும் தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
இதன்படி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் தினசரி இயக்கப்படும் பஸ்களுடன் கூடுதல் எண்ணிக்கையில் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் தங்களது பயணத்திற்கு tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்யலாம். இச்சிறப்பு பஸ்களின் இயக்கத்தை கண்காணிக்க அனைத்து பஸ் நிலையங்களிலும் போதிய அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே, பயணிகள் மேற்கூறிய வசதியை பயன்படுத்தி தங்களது பயணத்தை மேற்கொள்ளலாம். இவ்வாறு கூறினர்.