மதுரை, நவ. 28: ஓய்வுபெற்ற கோயில் ஊழியர்களுக்கு, ரூ.5 ஆயிரம் ஓய்வூதியம், பொங்கல் கருணைத் தொகை ரூ.1000 வழங்க வேண்டும் என, தமிழ்நாடு கோயில் ஓய்வு பெற்ற பணியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் மாநில சிறப்பு தலைவர் கோபாலகிருஷ்ணன் அறிக்கை: சட்டசபையில் கடந்தாண்டு ஏப்.19ல் கோயில் பூசாரிகளுக்கான ஓய்வூதியத்தை ரூ.4 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியத்தை ரூ.2 ஆயிரமாகவும் உயர்த்தி அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். பொங்கல் கருணைத்தொகை ரூ.1000 வழங்க அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி 2023 ஜூன் 22 முதல் ஓய்வூதியம் உயர்வும், பொங்கல் கருணைத்தொகை ரூ.1000ம் ஓய்வூதியர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. குடும்ப ஓய்வூதியர்களுக்கு கருணைத்தொகை வழங்கவில்லை.
தற்போதுள்ள விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு ஓய்வூதியத்தை ரூ.5 ஆயிரமாகவும், குடும்ப ஓய்வூதியம் ரூ.2500ம், பொங்கல் கருணைத்தொகை 2025ம் ஆண்டிற்கு ரூ.1000ம் வழங்க அரசை வலியுறுத்தி மனு கொடுக்கப்பட்டுள்ளது. இது அரசு சாரா நிதிச்செலவினம் என்பதால் இந்த பலன்களை வழங்க வேண்டும் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

