சோழவந்தான், அக். 23: சோழவந்தானில் இருந்து பள்ளப்பட்டி செல்லும் சாலையில் கருப்பட்டி பிரிவு பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் சோழவந்தான் இன்ஸ்பெக்டர் ஆனந்த குமார் மற்றும் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் இருந்த சாக்கு மூட்டையில் 8 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து கஞ்சாவை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். காரில் இருந்தவரிடம் நடத்திய விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் வெங்கமேடு, விவிஜி நகரைச் சேர்ந்த தங்கவேல் என்பவரது மகன் சதீஷ்குமார் (25) என்பது உறுதியானது. விசாரணையில் அவர் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் சதீஷ்குமாரை கைது செய்தனர். கஞ்சாவை மதுரைக்கு கடத்தி வந்ததால், இங்கு யாருடன் அவருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.