மதுரை, அக். 23: மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் வகையில், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட காவல் விழிப்புணர்வு வாகனத்தை போலீஸ் கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண்டு தோறும் அக்.21ம் தேதி தமிழக காவல்துறையில் பணிபுரிந்து மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக நீத்தார் நினைவு நாள் காவலர் வீர வணக்க நாளாக தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தி கொண்டாடப்பட்டு வருகிறது. இதையடுத்து மதுரை மாநகர ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற விழாவில் மறைந்த காவலர் நினைவு ஸ்தூபியில் கலெக்டர், தென் மண்டல ஐஜி மற்றும் மாநகர போலீஸ் கமிஷனர் ஆகியோர் தலைமையில் காவலர் வீரவணக்க நாள் ஸ்தூபியில் மறைந்த காவலர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதன் தொடர்ச்சியாக, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், மறைந்த காவலர்களின் தியாகத்தை போற்றும் விதமாக காவலர் வீரவணக்க நாள் விழிப்புணர்வு வாகன சேவை தொடங்கியது. மாநகரில் ஒரு வாரம் உலா வரும் இந்த வாகனத்தினை போலீஸ் கமிஷனர் லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார். விழாவில் காவல் துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள் மற்றும் ஆய்வாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.