வேதாரண்யம், ஜூலை 11: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடிக்கரை வன உயிரின சரணாலயம் 2250 ஹெக்டேர் பரப்பளவு கொண்டது. இச்சரணாலயத்திற்குள் மிகப் பழமை வாய்ந்த மாட்டு முனீஸ்வரர் கோயில் உள்ளது. கோடியக்கரை வன விலங்கு சரணாலயத்தில் இப்பகுதி மக்கள் தங்கள் வளர்ப்பு மாடுகள் மேய்ச்சலுக்கு விடுவது வழக்கம். இப்படி விடும் மாடுகளை முனிஸ்வரன் பாதுகாத்துக் கொள்வார் என்பது மக்களின் நம்பிக்கை. இதனால் இந்த முனீஸ்வரனுக்கு மாட்டு முனீஸ்வரன் என்றும், காட்டில் மான் தலையை மாற்றி மாட்டு தலையாக பக்தர்களுக்கு அருள் பாலித்ததாகவும், இதனால் மாட்டு முனீஸ்வரன் என பெயர் வந்தாக வரலாறு. இக்கோவில் புதுபிக்கப்பட்டதை தொடர்ந்து, கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று, முதல் கால, 2ம் கால யாக சாலை பூஜை நடைபெற்றது. இன்று காலை மூன்றாம் கால யாக சாலை பூஜை நிறைவுற்றது. இதனை தொடர்ந்து புனித நீர் அடங்கிய கலசங்களுடன் சிவாச்சாரியார்கள் கோவிலை வலம் வந்தனர். அதன் பின்னர் விமான கலசத்திற்கும், மூலவருக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இக்கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
+
Advertisement