தேன்கனிக்கோட்டை, நவ.12: தேன்கனிக்கோட்டையில், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டத்தலைவர் முனிராஜூலு தலைமை தாங்கினார். புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 70 வயது கடந்தவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும். பட்டு வளர்ச்சித்துறையில் தினக்கூலி, சத்துணவு, அங்கன்வாடி, வனக்காவலர், வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி எழுத்தர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
மருத்துவ காப்பீடு திட்ட குளறுபடிகளை களைந்து, காசில்லா மருத்துவ காப்பீடு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்ட தலைவர் துரை, துணைத்தலைவர்கள் நாகராஜன், வெங்கடேசா, மண்டல துணைத்தலைவர் நாகராஜன் ஆகியோர் பங்கேற்று கோரிக்கை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் ஓய்வூதியர்கள் திரளாக பங்கேற்று கோஷங்களை எழுப்பினர். ஊத்தங்கரை: ஊத்தங்கரை பிடிஓ அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டார தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் திருநாவுக்கரசு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம் சாந்தி, மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்று, புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
