ஓசூர், ஆக.8: சேலம் மாவட்டம், மேட்டூரில் இருந்து 2 ரெடிமேட் சிமெண்ட் கலவை மிக்சிங் செய்யும், புதிய லாரிகள் ஓசூர் வழியாக பெங்களூரு தேவனஹள்ளி பகுதிக்கு சென்றது. ஓசூர் நகர் பகுதியில் பழைய பிஎஸ்என்எல் அலுவலகம் சாலையில் சென்றபோது முன்னால் சென்ற லாரி, சாலையின் குறுக்கே சென்ற மின்கம்பியில் சிக்கி இழுத்து சென்றது. இதில் சாலையோரம் இருந்த மின்கம்பம் சாய்ந்தது. லாரியில் மின்கம்பிகள் சிக்கியதில் ஓட்டல் மற்றும் கார்நேஷன் கிளப் ஆகியவற்றின் மின்சார ஒயர்கள் அறுந்து கீழே விழுந்தது. அந்த நேரம் பொதுமக்கள் யாரும் சாலையில் செல்லாததால், பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. அப்போது அங்கு நின்றவர்கள் லாரி டிரைவரை எச்சரித்ததால், லாரி டிரைவர் அதிர்ச்சியில் லாரியை ஓரம்கட்டி நிறுத்த முயன்றதில் சாலையோரம் நின்ற கார்கள் மீது மோதியது. இதில் இரண்டு கார்கள் சேதமடைந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த ஓசூர் டவுன் போலீசார், உடனடியாக சம்பவ இடத்துக்கு சென்று சாலையின் இருபுறமும் தடுப்பு வேலிகளை அமைத்து போக்குவரத்தை தடை செய்தனர். பின்னர் அந்த பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. இதனால் அண்ணா நகர், சாந்தி நகர், உமாசங்கர நகர் ஆகிய குடியிருப்புகள் மற்றும் அரசு மருத்துவமனை சாலை, ரயில்வே ஸ்டேஷன் சாலை ஆகிய பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள், அறுந்த மின்கம்பிகள், சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.