கிருஷ்ணகிரி, அக்.1: கிருஷ்ணகிரியில் ஆயுத பூஜையை முன்னிட்டு பூஜை பொருட்களின் விற்பனை ஜோராக நடந்தது. நாடு முழுவதும் ஆயுத பூஜை பண்டிகை இன்று (1ம்தேதி) கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, கிருஷ்ணகிரியில் நேற்று காலை முதலே பூஜை பொருட்கள் விற்பனை அதிகமாக இருந்தது. கிருஷ்ணகிரி 5 ரோடு ரவுண்டானா, லண்டன்பேட்டை, ராயக்கோட்டை சாலை உள்ளிட்ட பகுதியில் வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், பூசணிக்காய், பொரி, பழங்கள், பூக்கள், வாழை விற்பனைக்காக குவிக்கப்பட்டிருந்தது. இதை வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் கடை வீதிகளில் திரண்டனர். மேலும், வர்த்தக நிறுவனங்கள், கடைகளை அழகுப்படுத்த வைக்கப்படும் கலர் பேப்பர்கள், பிளாஸ்டிக் தோரணங்கள் விற்பனையும் ஜோராக இருந்தது. கிருஷ்ணகிரி பெங்களூரு சாலை, சென்னை சாலை, 5 ரோடு ரவுண்டானா, பழைய சப்ஜெயில் சாலை, சேலம் சாலை மற்றும் ராயக்கோட்டை சாலையில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. இதனால் அந்த பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
+
Advertisement