கிருஷ்ணகிரி, ஆக.3: கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்கள், தமிழ்ச்செம்மல் விருது பெற விண்ணப்பிக்கலாம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ் வளர்ச்சித் துறையில், தமிழ் வளர்ச்சிக்காக அரும்பாடுபடும் ஆர்வலர்களை கண்டறிந்து, அவர்களின் தமிழ்த் தொண்டினை பெருமைப்படுத்தி, ஊக்கப்படுத்தும் வகையில் “தமிழ்ச்செம்மல் விருது” 2015ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்ச்செம்மல் விருது பெறுபவர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகையும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 2025ம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருதுக்குரிய விண்ணப்பப் படிவத்தினை தமிழ் வளர்ச்சித்துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் அல்லது கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.
விண்ணப்பிப்பவர்கள் தன் விவரக் குறிப்பு, நிழற்படம் இரண்டு, ஆற்றிய தமிழ்ப்பெணி, தாசில்தார் வழங்கும் குடியிருப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டை நகல் ஆகிய விவரங்களுடன் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் வருகிற 25ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.