கோவை, நவ. 21: ரயில் மோதி கால்கள் துண்டான நிலையில், கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி இறந்தார். அதேபோல அடையாளம் தெரியாத முதியவர் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை ரயில் நிலையம் யார்டு பகுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு கால்கள் துண்டாகி உயிருக்கு போராடி கொண்டு இருந்தார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் தனது பெயர் சந்துரு (47) என்பதை மட்டும் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் சந்துரு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆனால் எந்த ஊரை சேர்ந்தவர்? போன்ற மற்ற விவரங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சந்துரு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல வடகோவை ரயில் நிலையத்தில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் ரயிலில் அடிப்பட்டு உயிருக்கு போராடினார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து கோவை ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் மருத்துவமனைக்கு சென்று இறந்த முதியவரின் உடலை சோதனை செய்தனர். அதில் அவரது இடது முட்டியில் ஒரு பழைய காயத்தழும்பு, இடது முழங்கையில் ஒரு பழைய காயத்தழும்பு. மேலும் அவர் மஞ்சள் நிற அரைக்கை சட்டை, கிரே நிற வேட்டி அணிந்திருந்தார். இதை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த முதியவர் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர் ? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


