கோவை, நவ. 18:சேலத்தில் மாயமான கல்லூரி மாணவி 24 மணி நேரத்தில் கோவையில் மீட்கப்பட்டார். கோவை மாநகர போலீஸ் கமிஷனர் கடந்த 15ம் தேதி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்புக்காக பிங்க் நிற ரோந்து வாகனத்தை தொடங்கி வைத்தார். பிங்க் நிற காரில் ஒரு எஸ்ஐ, ஒரு போலீஸ்காரர் இரவு முழுவதும் நகரின் பஸ் நிலையங்கள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் ரோந்து சென்று பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு கோவை காட்டூர் இன்ஸ்பெக்டர் சரவணன் உத்தரவுபடி, சப் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் பிங்க் நிற பேட்ரோல் காரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது நள்ளிரவில் காந்திபுரம் பஸ் நிலையம் அருகே 19 வயது இளம்பெண் ஒருவர் தனியாக எங்கு செல்வது என்று தெரியாமல் தவித்துக்கொண்டு இருந்தார். அவரைப் பார்த்த சப் இன்ஸ்பெக்டர் கவிதா மற்றும் போலீசார் அவரிடம் விசாரித்தனர். அப்போது அந்த மாணவி சேலம் கொண்டலாம்பட்டியை சேர்ந்த தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 19 வயது மாணவி என்பது தெரியவந்தது.
விசாரணையில், வீட்டில் செல்போன் அதிகம் நேரம் பயன்படுத்தி கொண்டிருந்ததால் பெற்றோர் அவரை திட்டியதால் கோபித்துக் கொண்டு சேலத்தில் இருந்து பஸ்சில் புறப்பட்டு கோவை வந்ததாகவும், பணம் இல்லாததால் எங்கு செல்வது என்று தெரியாமல் நிற்பதாகவும் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து போலீசார் கல்லூரி மாணவியை மீட்டு கவுண்டம்பாளையத்தில் உள்ள பெண்கள் காப்பகத்தில் இரவில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். இதுகுறித்து மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கோவை புறப்பட்டு வந்த பெற்றோரிடம் மாணவி நேற்று ஒப்படைக்கப்பட்டார். மாணவி மாயமான 24 மணி நேரத்தில் போலீசார் மீட்டு ஒப்படைத்தது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.


