கோவை,அக்.17: கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள தடாகம், மடத்தூர், பன்னிமடை, நஞ்சுண்டாபுரம் ஆகிய பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து அடிக்கடி வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருகின்றன. இந்நிலையில் நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றைக் காட்டு யானை தடாகம் அருகே உள்ள மடத்தூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளுக்குள் சுற்றி திரிந்துள்ளது.
அப்போது மடத்தூர் பகுதியில் உள்ள ரேஷன் கடையை சேதப்படுத்திய காட்டு யானை, அரிசியை சாப்பிட்டு சென்றுள்ளது. மேலும் ராமநாதபுரம் பகுதியில் தனியார் நபருக்கு சொந்தமான வாழை தோட்டத்தையும் சேதப்படுத்தி சென்றுள்ளது. பின்னர் அதிகாலையில் அந்த யானை வனப்பகுதிக்குள் சென்றது. காட்டு யானைகள் கிராமங்களுக்குள் நுழைவது அதிகரித்து வருவதை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.