கோவை, செப். 17: கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னை, மும்பை, பெங்களூரு, டெல்லி, ஹைதராபாத், பூனே, கோவா ஆகிய உள்நாட்டு பகுதிகளுக்கும், சிங்கப்பூர், ஷர்ஜா, அபுதாபி ஆகிய வெளிநாடுகளுக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் நேற்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கோவை விமான நிலையத்திற்கு வருகை தந்தார்.
இதற்கு முன்னதாக விமான நிலைய வளாகத்திற்கு முன்பாக நிறுத்தப்பட்டு இருந்த அவர் பயணம் செய்யும் கார் மற்றும் உடன் செல்லும் வாகனங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை செய்தனர். மேலும் அந்த வாகனங்களை திறந்தும், வாகனங்கள் நிறுத்தமிடங்களிலும் அவர்கள் சோதனை செய்தனர். இது பாதுகாப்பு காரணங்களுக்காக வழக்கமாக நடத்தப்படும் சோதனை என அதிகாரிகள் தெரிவித்தனர்.