கோவை, அக். 12: கோவை மாவட்டம் சூலூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிட்டாம்பாளையம் ஊராட்சியில் நேற்று கிராம சபா கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலர் மாருக்குட்டி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வி.எம்.சி.சந்திரசேகர் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில், சமூக நலத்துறை அதிகாரி நீலவேணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.இக்கூட்டத்தில், “வினோப நகரில் சுமார் 500க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இருப்பதாலும், அவர்கள் வாக்களிக்க சுமார் 2 கி.மீ தூரம் செல்ல வேண்டிய உள்ளதாலும் வினோப நகரிலேயே ஒரு வாக்குப்பதிவு மையம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும், சாலை பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விதமாக அனைவரும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பின்னர், எச்ஐவி தொற்று பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இக்கூட்டத்தில், தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டுக்கான திட்டம் பற்றி எடுத்துரைக்கப்பட்டது. ரூ.1,791.23 கோடி செலவில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் அமைத்து கோவை மக்களின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு கண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொளி காட்சி வாயிலாக ஊராட்சி மன்ற தலைவர்களுடன் கலந்துரையாடியது, ஊர்மக்களை வெகுவாக கவர்ந்தது.
இக்கூட்டத்தில், கிராம நிர்வாக அலுவலர் வசந்த சேனா, கிருஷ்ணா கல்லூரி மாணவ மாணவிகள், தூய்மை பணியாளர்கள், வேளாண் துறை அதிகாரிகள், கூட்டுறவு மற்றும் சுகாதார அதிகாரிகள் கலந்துகொண்டனர்.