கோவை, டிச. 9: உடற்பயிற்சி செய்து திரும்பிய போது ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெற்ற வந்த இன்ஜினியர் திடீரென உயிரிழந்தார். கும்பகோணம் ஆர்கே நகர் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் முருகானந்தம் (28). இவர் இன்ஜினியரிங் படித்துவிட்டு ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு தயாராகி வந்தார். அதற்காக கோவை கேகே புதூர் அருகே உள்ள அன்னை இந்திரா நகரில் குடியிருக்கும் அவரது சகோதரி வீட்டில் தங்கிருந்து ஐ.ஏ.எஸ். தேர்வு மையத்தில் பயிற்சி பெற்று வந்தார்.
இதனிடையே தினமும் காலையில் எழுந்ததும் முருகானந்தம் உடற்பயிற்சி செய்வது வழக்கம். நேற்று முன்தினம் காலையில் எழுந்து முருகானந்தம் உடற்பயிற்சி செய்துவிட்டு வீட்டிற்கு சென்றார்.
அப்போது திடீரென முருகானந்தம் மயங்கி விழுந்தார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


