அரவக்குறிச்சி, செப்.25: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே உள்ள அண்ணாநகர் பகுதியில் மெடிக்கல் கடை பூட்டை உடைத்து ரூ.52,000த்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், பள்ளப்பட்டியைச் சேர்ந்த முகமது இக்பால் (50), கடந்த 25 ஆண்டுகளாக அண்ணாநகர் பகுதியில் மெடிக்கல் ஷாப் நடத்தி வருகிறார். வழக்கம்போல் நேற்றுமுன்தினம் இரவு 10 மணியளவில் கடையை பூட்டி வீட்டிற்கு சென்று விட்டார்.
நேற்று காலை கடையை திறக்க வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடைக்குள் சென்று பார்த்தபோது, கல்லாபெட்டியில் வைத்திருந்த ரூ.52,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து இக்பால் அரவக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அரவக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் அருகிலுள்ள நெடுஞ்சாலை பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.