கரூர், டிச. 11: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் தங்கவேல், தலைமையில் நேற்று அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களும் மனித உரிமைகள் நாள் உறுதி மொழியினை எடுத்துக் கொண்டனர். “இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரையறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதியுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன். எவ்வித வேறுபாடமின்றி, அனைவரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன்.
என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்.” என்ற உறுதிமொழியினை கலெக்டர் வாசிக்க, அனைத்து துறை அலுவலர்களும் திரும்ப வாசித்து ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யுரேகா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) மனோகரன் மற்றும் மாவட்ட வழங்கல் அலுவலர் சிவக்குமார் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


