நாகர்கோவில், அக். 24: நாகர் கோவிலில் அரசு பஸ் மோதி வாலிபர் பலியானார். நாகர்கோவில் கோட்டார் கம்பளம் பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்று இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடையின் முன்புள்ள சாலையோரம் 2 பேர் குடிபோதையில் நேற்று முன்தினம் நடந்து சென்றுள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பஸ், நடந்து சென்றவர்களில் ஒருவர் மீது மோதியது. இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இது குறித்து நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், இறந்தவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மற்றொருவர் போதையில் இருந்ததால், இறந்தவர் யார் என்பது தெரியவில்லை. இது தொடர்பாக போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் பஸ் மோதி இறந்தவர், மருங்கூர் அமராவதி விளை புனித அந்தோணியார் தெற்கு தெருவை சேர்ந்த மரியசேவியர் (35) என்பது தெரியவந்தது. இது குறித்து போக்குவரத்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+
Advertisement

