கன்னியாகுமரி, செப். 11: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வதை பார்க்க முடிகிறது. இப்படி வந்து செல்கின்றவர்கள், கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை படகில் சென்று பார்த்துவிட்டு திரும்புவது வழக்கம். இதற்காக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம், தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை இடைவேளையின்றி படகுகளை இயக்கி வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு போக்குவரத்து, கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக, 1 மணி நேரம் தாமதமாக காலை 9 மணிக்கு தொடங்கியது. அதேபோல் நேற்று காலையும் கடலில் நீர்மட்டம் தாழ்வு காரணமாக காலை 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகுசேவை தொடங்கவில்லை. பின்னர் நீர்மட்டம் சகஜ நிலைக்கு வந்ததை தொடர்ந்து, 2 மணி நேரம் தாமதமாக காலை 10 மணிக்கு படகுசேவை தொடங்கியது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் உற்சாகமாக படகில் சென்று விவேகானந்தர் நினைவு மண்டபம், கண்ணாடி இழை கூண்டு பாலம் வழியாக நடந்து சென்று 133 அடி உயர திருவள்ளுவர் சிலையை பார்த்துவிட்டு திரும்பினர்.
+
Advertisement